பாங்காக்,
இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் தாமஸ் டேவிட் பவுல் (வயது 34). இவரது காதலி இசபெல் வைலட் கரிரஸ் (வயது 21). இவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார்.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்குமுன் தாய்லாந்து வந்துள்ளனர். தாய்லாந்தின் பட்டாயா பகுதியிலுள்ள சொகுசு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். மது, போதைப்பழக்கத்திற்கு அடிமையான இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கடந்த புதன்கிழமை பட்டாயா பகுதியில் உள்ள நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு திருமணத்திற்கான மோதிரம் வாங்குவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட இருவரும் உயர்ரக கபின் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர்.
அப்போது, போதையில் இருந்த இருவருக்கும் இடையே வீட்டில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் போதையில் இருந்த இசபெல் வீட்டில் இருந்த கத்தியால் காதலன் தாமஸ் டேவிட் பவுலை சரமாரியாக குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போதையில் இருந்த இசபெல் உயிரிழந்த காதலின் அருகேயே உறங்கியுள்ளார்.
மறுநாள் காலை இசபெலின் தோழி அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது டேவிட் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக போலிசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், டேவிட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதையில் காதலனை கத்தியால் குத்திக்கொன்ற இசபெல்லை கைது செய்து விசாரணை நடத்திவ் வருகின்றனர்.