உலக செய்திகள்

‘சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க வேண்டும்' - இலங்கை அரசிடம் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார்.

கொழும்பு,

இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்ரம் மிஸ்ரி, அரசு முறை சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளராக இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இலங்கை சென்ற அவர், அந்நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயகே, பிரதமர் ஹரினி அமரசூரியா, வெளியுறவுத்துறை மந்திரி விஜித ஹேரத் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் அருணி ரணராஜா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, மீனவர்கள் விவகாரம் குறித்து எடுத்துரைத்த விக்ரம் மிஸ்ரி, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தினார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருதரப்பிலும் அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் அதே வேளையில், மீனவர்களின் வாழ்வாதாரத் தேவைகளை கருத்தில் கொண்ட மனிதாபிமான அணுகுமுறையே நமது செயல்பாடுகளுக்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவுகளில் மீனவர் விவகாரம் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளைக் கைப்பற்றியதுமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி வரை, சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 18 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 128 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.