பொகொடா,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்படையினர் நேற்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வெடிகுண்டுகள் நிரம்பப்பட்ட கார் வேகமாக வந்தது. சோதனைச்சாவடி அருகே காரை நிறுத்திய பயங்கரவாதி அதில் இருந்து கீழே இறங்கி வேகமாக ஓடியுள்ளார்.
பின்னர், அந்த காரை பயங்கரவாதி வெடிக்கச்செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்பணியில் இருந்த 2 பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்தனர். கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பைக்கில் ஏறி தப்பிச்சென்றுள்ளான். இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலம்பியாவில் கடந்த சில நாட்களுக்குமுன் புதிய ஜனாதிபதியாக அல்பர்டோ டி லா எஸ்பிரிலா பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.