உலக செய்திகள்

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை பலனாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: வெள்ளை மாளிகை

20 சரக்கு கப்பல்களுக்கு பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டன் டி.சி.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளின் பலனாகவே ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளின் பயனாக இது அமைந்துள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கூறும்போது, ஈரான் குறிப்பிட்ட சரக்கு கப்பல்களை மட்டுமே அனுமதிக்கிறது என்பதில் உண்மையில்லை. ஏற்கனவே ஈரான் அறிவித்தபடி 10 கப்பல்கள், ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்கின்றன. கூடுதலாக 20 சரக்கு கப்பல்களுக்கு பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவை வருகிற நாட்களில், ஜலசந்தியை கடந்து பயணிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வரும் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளின் பலனாகவே ஆகும் என்று கூறினார். டிரம்ப் தலைமையிலான அரசு மற்றும் அவருடைய குழுவினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சி இல்லாமல் இதற்கு சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தி கூறினார்.