சென்னை,
சமீபத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை முன்னெடுத்து செல்லும் வகையில், லண்டன் செல்லும் முதல்-அமைச்சர் விஜய் அங்குள்ள முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, சில்வர்ஸ்டோனில் உள்ள புகழ்பெற்ற மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை விஜய் பார்வையிட உள்ளார்.
இந்தநிலையில் சில்வர்ஸ்டோனில் நாளை (சனிக்கிழமை) தொடங்கவுள்ள 'மிச் செலின் லீ மென்ஸ் கார்' பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை மிச்செலின் லீ மென்ஸ் போட்டிக்கான நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போட்டி தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது அணி சார்பில் கலந்து கொள்கிறார்.
லண்டன் சென்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தனது நண்பரான அஜித்தை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் பங்கேற்கும் கார் பந்தய போட்டியை விஜய் கொடி அசைத்து தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமார், “திரைத்துறையில் நாங்கள் சக நடிகர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. தன் கடுமையான பணிச் சூழலுக்கிடையே, என்னுடைய அழைப்பின் பேரில் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை தொடங்கிவைக்க முதல்-அமைச்சர் விஜய் லண்டன் வந்துள்ளார். விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்கிறார்.
லண்டனில் உள்ள 'சில்வர் ஸ்டோன்' ரேஸிங் டிராக் போன்றதை சென்னையில் உருவாக்க முதல்-அமைச்சர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்தும் இந்தியாவில் வர வேண்டும் என்பதே என் விருப்பம். லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று அவர் கூறினார்.