பீஜிங்,
இந்தியாவும் சீனாவும் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர்கள் எல்லைப் பகுதியை பகிர்ந்துள்ளது. லடாக்கில் தொடங்கி அருணாசல பிரதேசம் வரை இந்த எல்லைப் பகுதி நீள்கிறது.
ஆசியாவில் தன்னை வல்லாதிக்க நாடாக காட்டிக்கொள்ள முனையும் சீனா அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆசியாவில் சீனாவுக்கு கடும் சவால் அளிக்கும் நாடாக உள்ள இந்தியாவுடனும் தனது வேலையை அவ்வபோது காட்டி வருகிறது.
இந்ஹநிலையில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள தனது விமானப் படைத் தளங்களில், 5வது தலைமுறை போர் விமானங்களை நிலைநிறுத்தி உள்ளது சீனா.
11 ஜே-20 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பது சாட்டிலைட் படங்களில் தெரியவந்துள்ளது. இந்தியாவை இலக்காகக் கொண்டு, ஒரே நேரத்தில் இவ்வளவு ஜே-20 போர் விமானங்கள் (குவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலும் ஜூலை மாதத்தின் முற்பகுதியிலும் இரண்டு சீன விமானத் தளங்களில் 12 ஜே-20 ஸ்டெல்த் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதைக் செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.
சின்ஜியாங்கில் உள்ள ஹோட்டானில் எட்டு போர் விமானங்கள் இருப்பதைக் காட்டுகின்றன. இது இந்தியாவின் லே நகரத்திலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் நான்கு போர் விமானங்கள் திபெத்தில் உள்ள டாம்சுங்கில் காணப்பட்டன. இந்தத் தளம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங்கிற்கு வடமேற்கே 344 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
5வது தலைமுறை போர் விமானங்கள் எதுவும் தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.