உலக செய்திகள்

சீனா ரசாயன ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

சீனாவின் ஜியாங்சு மாகாணம் யான்செங் நகரில் ரசாயன ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதனால் ஏற்பட்ட தீ, ஆலை முழுவதையும் சூழ்ந்து கொண்டது.

பீஜிங்,

ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 1,000 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் பலர் தீயில் கருகி பலியாகினர். இந்த கோரவிபத்தில் 6 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நேற்று காலை ஆலைக்குள் இருந்து மேலும் 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 90 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களில் 32 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT