பெய்ஜிங்,
பயங்கரவாத தாக்குதலால் முடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் இம்ரான் கான் இடையே நேர்மறையான கருத்துக்கள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் உறவுகளை எளிமையாக்குதில் ஆக்கப்பூர்வமான பங்கை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம் என சீனா கூறியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் பேசுகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படுவது பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானது. இருதரப்பு உறவு தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டது தொடர்பான செய்தியை பார்க்கிறோம். தெற்கு ஆசியாவில் இரு நாடுகளும் மிகவும் முக்கியமானது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஒரு பொதுவான அண்டை நாடாக சீனா, இருதரப்பு உறவை மேம்படுத்த உதவிகளை செய்யும் என கூறியுள்ளார்.
இருதரப்பு ஒற்றுமை பிராந்திய அமைதிக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், இதில் சீனா ஒரு ஆக்கபூர்வமான பங்கை கொள்ள தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இருதரப்பு விவகாரத்தில் மூன்றாவது நபர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இந்தியா கூறியுள்ளது.