உலக செய்திகள்

சீனாவில் உளவு பார்த்த அமெரிக்கருக்கு ஆயுள் தண்டனை

சீனாவில் உளவு பார்த்த அமெரிக்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து சுசோ நகர கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

பீஜிங்,

சீனாவின் ஒரு பிராந்தியமான ஹாங்காங்கில் வசித்து வருபவர் ஜான் ஷிங் வான் லியுங் (வயது 78). அமெரிக்க நாட்டை சேர்ந்த இவர் ஹாங்காங்கில் நிரந்தர குடியுரிமை வைத்துள்ளார். இவர் மீது சீனாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் தென்கிழக்கு நகரமான சுசோவில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்தது. இதில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதனையடுத்து ஷிங் வானுக்கு ஆயுள் தண்டனை விதித்து சுசோ நகர கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. சமீப காலமாக அமெரிக்கா-சீனா உறவில் ஏற்கனவே மோதல் நிலவி வரும் நிலையில் இது மேலும் விரிசலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT