பிஜீங்,
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்டநாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் மக்கள் தொகை சரிவு காரணமாக அந்த இடத்தை இந்தியாவிடம் சீனா இழந்துள்ளது. சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக அந்நாட்டு மக்கள் தொகை சரிவை சந்தித்தது.
சீனாவில் தற்போது மக்கள் தொகை சுமார் 141 கோடியாக உள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் சரிவு மற்றும் கடுமையான குழந்தை கட்டுப்பாடு கொள்கைகள் ஆகியவை இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் 2054-க்குள் மக்கள் தொகை வெகுவாகக் குறையக்கூடும் என ஐ.நா கணித்துள்ளது. இந்த மக்கள் தொகை சரிவு சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள விமானப் போக்குவரத்துத் தொழிற்கல்லூரி ஒன்று தனது மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் 6 வரை வசந்தகால விடுமுறை அளிக்க உள்ளது. இந்த விடுமுறை நாட்களில் “மலர்களைக் கண்டு, காதலை அனுபவியுங்கள்” என்று மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. சீன விமான போக்குவரத்து தொழிற்கல்லூரியின் இந்த அறிவுறுத்தல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.