உலக செய்திகள்

கொலம்பியா நிலநடுக்கம்; பிரபல பாடகிகள் ஷகிரா, பியான்ஸ் நிவாரண உதவி அறிவிப்பு

பாடகி பியான்ஸ் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் அமெரிக்க டாலரை நிவாரண பணிகளுக்கு ஆதரவாக அளிக்க முன்வந்துள்ளார்.

பொகாட்டா

கொலம்பியா நிலநடுக்க பாதிப்புகளுக்கு நிவாரண உதவி அளிக்க பிரபல பாடகிகள் ஷகிரா, பியான்ஸ் முன்வந்துள்ளனர்.

கொலம்பியா நாட்டின் மேற்கே அமைந்துள்ள சாக்கோ மாகாணத்தில் கடந்த 10-ந்தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதில், 312 பேர் உயிரிழந்தனர். 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.

நிவாரண உதவி

இதுபற்றி ஐ.நா. அமைப்பின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட செய்தியில், சாக்கோ மாகாணத்தில் 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டோ அல்லது புலம்பெயர்ந்தோ சென்றுள்ளனர் என தெரிவித்தது.

இந்த பாதிப்புகளுக்கு உதவிக்கரம் நீட்ட பல பிரபலங்கள் முன்வந்துள்ளனர். இதன்படி, பாடகிகளான ஷகிரா, பியான்ஸ் நிவாரண உதவி அறிவித்துள்ளனர். கொலம்பியாவின் மேற்கே அமைந்துள்ள சாகோ மாகாணத்தில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பாடகி ஷகிரா, 10 பள்ளிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கும் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை மீட்டெடுக்கவும் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு ஆதரவாக, இரு சர்வதேச பங்குதாரரர்கள் தலா 5 லட்சம் அமெரிக்க டாலரை (1 அமெரிக்க டாலர் என்பது 95 ரூபாய்) அளிக்க முன்வந்துள்ளனர். மற்றொரு பாடகியான பியான்ஸ் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் அமெரிக்க டாலரை நிவாரண பணிகளுக்கு ஆதரவாக அளிக்க முன்வந்துள்ளார். மற்றொரு கொலம்பிய பாடகியான கரோல் ஜி, தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் 12 லட்சம் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார்.