பொகோட்டா,
கொலம்பியாவில் 125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் (சி-130 ஹெர்குலஸ்) கீழே விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானதில், சுமார் 66 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் பலர் மாயமாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். கொலம்பியா விமானப்படையின் சமீபகால வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இந்த சி-130 ஹெர்குலஸ் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.
ஈக்வடார் மற்றும் பெருவுடனான தெற்கு எல்லைக்கு அருகிலுள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. தற்போது எரிந்து கொண்டிருக்கும் விமானத்தின் பாகங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையும், விபத்துக்கான காரணங்களும் இன்னும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்றபோது அந்த விமானம் விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
நகர மையத்திலிருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் 110 ராணுவ வீரர்களும், 10 விமான பணியாளர்களும் உள்ளே இருந்தது தெரிய வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், ஏராளமானோரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காட்டுப்பகுதியில் விழுந்த விமானம், கொழுந்துவிட்டு எரிந்ததால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.