காபுல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் சுற்றி வளைக்கப்பட்டதால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார். அவர் தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தானின் நிலையை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என்றும் அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன.
தலிபான் அமைப்பு சார்பில் முதல் முறையாக நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகளை வழங்க தலிபான் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.