கின்ஷாசா
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த பாதிப்புக்கு 220 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுபறி சுகாதார மந்திரி ரோஜர் கம்பா கூறும்போது, தொற்றுகளும், மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய வகையில் ஆயிரம் பேரை கண்டறிந்து உள்ளனர்.
அவர்களில் 101 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது என கம்பா கூறினார். இதுவரை பலியாகி உள்ள 200 முதல் 220 பேரில் இந்த தொற்றுக்கு தொடர்பு இருக்கும் என நம்பப்படுகிறது. அவர்களில் 17 பேரின் மரணம் ஆய்வக பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே நாம் இன்னும் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இந்த மரணம் சந்தேக அடிப்படையிலானவை. இருப்பினும், இந்த வியாதிக்கு உண்மையில் என்ன காரணம்? என்பது பற்றி உறுதி செய்வதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன என்றார். இது உலகிலேயே மிக கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்த கூடும்.
காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆன்டனியோ டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என்றார்.
இதற்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன. தடுப்பூசி கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.