நியாமி,
நைஜர் நாட்டின் மேற்கு பகுதியில் சமீப ஆண்டுகளாக பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், மாலி நாட்டை ஒட்டிய எல்லை பகுதியில் தஹவுவா நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் இன்தாஜாயென், பகோராதே மற்றும் பிற பகுதிகளில் வீடுகளை தீ வைத்து கொளுத்தியும், மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் கொலைவெறி தாக்குதலை தொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 40 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில், இதே பகுதியில் சோம்பங்கவ் மற்றும் ஜரவும்டேரெய் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.