இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம், இந்தியாவுடன் சுமார் 1,751 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவின் நெருக்கமான நாடாக நேபாளம் இருந்தாலும், சமீப காலமாக இந்தியாவை சீண்டும் செயல்களில் அடிக்கடி அந்த நாடு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு நேபாளம் வெளியிட்ட பணத்தாளில் இடம்பெற்ற வரைபடத்தில் இந்தியாவின் கலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சித்தரித்திருந்தது. இது கடும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், இந்தியாவின் ஒரு அங்கமான காஷ்மீரை பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று வரைபடம் ஒன்றை நேபாள அரசுக்கு சொந்தமான நேபாள ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி, பாகிஸ்தானின் பிரதேசமாக காட்டப்பட்டிருந்தது. அது சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது. வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், சம்பந்தப்பட்ட நேபாள ஏர்லைன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதையடுத்து அந்த பதிவை நேபாள ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும், பிழையாக வெளியான அந்த வரைபடத்திற்காக மன்னிப்பு கோருவதாகவும் நேபாள ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.