வாஷிங்டன்,
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது அமெரிக்காதான். வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. தற்போது, கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 4.2 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,99,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,04,30,797 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 2,398 பேர் பலியாகி உள்ளதைதொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,50,186ஆக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.