கொழும்பு,
இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அடைந்து வரும் துயர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், பலமடங்கு அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க முடியாமலும் அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தொடங்கி மின்வெட்டு, சமையல் எரிவாயு பற்றாக்குறை என கடும் துயரத்தை இலங்கை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா ஆதரவுக்கரம் அளித்து வருகிறது. பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக அளித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை இலங்கை ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசின் பொதுத்துறை எரிவாயு நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ திஷேரா ஜெயசிங்கே இது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, எரிவாயு தொழிலில் மிகப்பெரும் மோசடிகள் நடைபெறுவதாகவும் தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக்குற்றம் சாட்டியுள்ள திஷேரா ஜெயசிங்கே தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.