உலக செய்திகள்

கணவரின் கள்ள காதலால் கொடூரம்..!

2-வது திருமணமான புகைப்படங்களை வாட்ஸ் அப்-இல் பகிர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி

ஹராரே,

கணவரின் தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் கணவரை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி, பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்காதல்

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே பகுதியில் வசித்து வருபவர் மார்ட்டின் முடுவா (வயது 42). இவர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி லிலியோசா சிராரா (வயது 43). இவர் அதே பகுதியில் உள்ள சாலி முகாபே அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முடுவாவுக்கும் பேஷன்ஸ் மங்விரோ என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளகாதல் இருந்துள்ளது. இதன் மூலம் இருவருக்கும் இடையே ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் மங்விரோவை திருமணம் செய்வதற்கு முடுவா முடிவு செய்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் முடுவாவின் மனைவிக்கு தெரிந்து இருவருக்கும் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோடாரியால் தாக்கிய மனைவி

முடுவா தனது கள்ளகாதலியான பேஷன்ஸ் மங்விரோவை கடந்த வாரம் குடும்பத்தார் சம்மதத்துடன் முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த அவரது முதல் மனைவி லிலியோசா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று முன் தினம் இந்த திருமணம் குறித்து மீண்டும் முடுவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த லிலியோசா, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தனது கணவரின் தலை மற்றும் கைகளில் கொடூரமாக தாக்கினார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த லிலியோசா வீட்டினுள் இருந்த எலி மருந்தை எடுத்தை குடித்து விட்டார். பின்னர் வேதனையில் துடித்த இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து, பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் எலி மருந்து குடித்த லிலியோசா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முடுவா தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து ட்ஸிவாராசெக்வா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT