லாகூர்,
இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதுபோன்று பாகிஸ்தான் நாட்டிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
7வது சீசன் பி.எஸ்.எல். போட்டிகள் நடந்து வரும் நிலையில், அதனை காண்பதற்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். போட்டியை பார்த்து விட்டு அவர் வீடு திரும்பி உள்ளார்.
எனினும், தனது குடும்பத்தினரை விட்டு விலகி வேறு இடத்திற்கு சென்று விட்டார். வீட்டுக்கு செல்லும் வழியும் அவருக்கு தெரியவில்லை. இதனால், அந்த பகுதியில் இருந்த இரண்டு தனியார் பாதுகாவலர்களை அணுகி உதவி கேட்டுள்ளார்.
அவர்கள் வழி காட்டுகிறோம் என கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதனால் அந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு சகோதரரும், தந்தையும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனியார் பாதுகாவலர்கள் இருவரும் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.