உலக செய்திகள்

பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்து உள்ளது.

பலூசிஸ்தான்,

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சஞ்ஜிதி பகுதியருகே நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 9-ந்தேதி திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர்.

இந்நிலையில், அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், முதலில் 4 பேரின் உடல்களை மீட்பு குழு மீட்டது. 3 ஆயிரம் அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் தவிர, 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்க கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியின் ஒரு பகுதியாக, மீதமுள்ளவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால், சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்து உள்ளது.