மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டில் லாஹுவெலில்பேன் என்ற பகுதியில் சான் பிரிமிடிவோ என்ற இடத்தில் உள்ள எண்ணெய் குழாய் ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்து உள்ளது. 40 பேர் மெக்சிகோ, ஹிடால்கோ மற்றும் மெக்சிகோ சிட்டி பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் தவிர 3 பேர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் கால்வெஸ்டன் நகரில் உள்ள சிறப்பு தீக்காய சிகிச்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் சிலரது உடலை அடையாளம் காண சர்வதேச நிபுணர்களின் உதவியை கோரவும் மெக்சிகோ அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தின்பொழுது, கசிந்து கொண்டிருந்த எண்ணெயை பிடிப்பதற்காக பொதுமக்களில் 600 முதல் 800 பேர் அங்கு திரண்டு வந்துள்ளனர் என அரசு தரப்பு தெரிவிக்கின்றது.
சட்டவிரோத முறையில் எண்ணெய் திருடர்களால் நடத்தப்படும் தாக்குதலில் இந்த விபத்து நடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் கடந்த 2018ம் ஆண்டில் நாட்டுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.