உலக செய்திகள்

கடல், வான் ஆயுதங்கள் தகர்ப்பு; ஈரானை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டோம்: டிரம்ப் அறிவிப்பு

ஈரானின் ராணுவத்திடம் 159 கப்பல்கள் இருந்தன. அவை தற்போது கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டன என்றார்.

வாஷிங்டன் டி.சி.

ஈரானின் கடல், வான் பாதுகாப்பு ஆயுதங்களை தகர்த்து, அந்நாட்டை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டோம் என டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் பலன் ஏற்பட்டது.

எனினும், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் திடீரென ஈரான் கப்பல்களை கடுமையாக தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா ஈரானை தாக்கி வருகிறது.

159 கப்பல்கள்

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பிற்காக ஈரான் மீது அமெரிக்கா புதிதாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஈரானின் அதிகாரத்துவம் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டது என கூறினார்.

எடுத்துக்காட்டாக, ஈரானின் ராணுவத்திடம் 159 கப்பல்கள் இருந்தன. அவை தற்போது கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. ஈரானிடம் 200 விமானங்கள் இருந்தன. அவை அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. அவர்களுடைய ரேடார்கள், விமானங்களை தாக்கி அழிக்கும் கருவிகள், ஆயுதங்களை உருவாக்கும் திறன் என எல்லாவற்றையும் அழித்து விட்டோம்.

கற்காலம்

ஈரானின் 84 சதவீத ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஈரானின் பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டு விட்டன. வான் பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆயுத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு விட்டன. 4 மாதங்களில் அவர்களை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டோம். தற்போது அவர்களிடம் மிகச்சில ஏவுகணைகளே உள்ளன.

குறைந்த அளவு திறனையே ஈரான் கொண்டுள்ளது. ஒரு வேறுபட்ட காலத்திற்கு அவர்களை கொண்டு வந்திருக்கிறோம். மத்திய கிழக்கில் ஈரான் அச்சுறுத்தலாக இருந்தது. இனி அவர்கள் எனக்கான அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.