உலக செய்திகள்

இறந்து இன்றுடன் 21 ஆண்டுகள்: இளவரசி டயானா கைப்பட எழுதிய அதிர்ச்சிக் குறிப்பு

இங்கிலாந்து இளவரசி டயானா இறந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் கைப்பட எழுதிய அதிர்ச்சிக் குறிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. #PrincessDiana

டயானாவின் முன்னாள் பட்லரான பால் புர்ரெல் டயானா இறப்பதற்கு 10 மாதங்கள் முன்பு அந்த கடிதத்தை தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அக்டோபர் மாதத்தின் இந்த நாளில் எனது மேஜையின் அருகே அமர்ந்திருக்கும் நான், என்னை யாராவது ஆரத்தழுவி ஆறுதல் கூற மாட்டார்களா என ஏங்கிக் காத்திருக்கிறேன். எனது வாழ்வின் இந்த காலகட்டம் மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது, எனது கணவர் எனது காரில், பிரேக் ரிப்பேரானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எனது தலையில் காயம் ஏற்படச் செய்து என்னைக் கொல்ல திட்டமிட்டு வருகிறார்.

என்னைக் கொன்று விட்டு டிக்கியை யை மணந்து கொள்வது அவருடைய திட்டம். கமீலாவைப் பொருத்தவரையில் அவள் தூண்டிலில் வைக்கப்படும் ஒரு இரைதான். ஆகவே நாங்கள் எல்லோருமே அந்த மனிதனால் ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதம் டயானாவின் மரணம் குறித்த நீதி விசாரணையின்போது கூட நீதிமன்றத்தில் காட்டப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது.

டயானாவுக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான லூசியா பிளெக்கா டா லிமா என்பவரிடம் இந்தக் கடிதத்தைக் காட்டியபோது அதை அவர் டயானா எழுதியது என ஒப்புக்கொள்ளவில்லை.அவரது பட்லரான பால் புர்ரெலுக்கு டயானாவின் கையெழுத்து நன்கு பரிச்சயம் என்றும் அவர் கூட அதை எழுதியிருக்கலாம் என்றும் அவர் கூறிவிட்டார். இன்று, ஆகஸ்டு 31 டயானா கோர விபத்தில் உயிரிழந்த நாள்.கார் ஓட்டுனரின் கவனக்குறைவும், டயானாவும் அவரது நண்பரும் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும்தான் அவர்கள் உயிரிழக்கக் காரணம் என நீதிமன்றமே கூறிவிட்ட நிலையிலும், டயானா இறந்து 21 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் இத்தகைய கதைகள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன.