காத்மண்டு,
உயர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகளை கொண்ட நேபாளம் நாடு இமயமலைக்கு மத்தியில் அமைந்துள்ளது. எனவே அடிக்கடி பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சந்தித்து வருகிறது.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் நேற்று காலை ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நேபா ளத்தைத் தாக்கிய பேரழிவுகள் வருமாறு:-
ஜூலை, 2025: நேபாளத்தில் மிகப் பெரிய பனிப் பாறை உருகியதால் இதே போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ரசுவா மாவட்டம் பேரழிவைச் சந்தித்தது. இந்த வெள்ளம் நேபாளம், சீனா எல்லை இணைப்பான மிதேரி பாலத்தை அடித்துச் சென்றது. மேலும் சுங்கப் பகுதி மற்றும் சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதில் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காணாமல் போயினர். 800-க்கும் மேற் பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர்.
செப்டம்பர், 2024: இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் நேபாள வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெள்ளப் பாதிப்பை சந்தித்தது. இதில் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 246 பேர் பலியாகி இருந்தனர். 183 காயமடைந்தனர். 17 பேரை காணவில்லை. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இந்த வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஜூன், ஜூலை-2023: ஜூனில் பெய்த பருவமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தின் கிழக்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 6 பேர் உயிரிழந்தனர். 29 பேரை காணவில்லை. வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
ஜூலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர், 2022: கர்னாலி ஆற்றுப்படுகை மற்றும் மேற்கு பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. இதில் 36 பேர் பலியானார்கள். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். சாலைகள், பாலங்கள் நீர்மின் நிலையங்கள் சேதமடைந்தன. செப்டம்பரிலும் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஜூன், 2021: மேலம்சி நதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்தன. 1500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் வணிகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடிநீர் திட்டத்தின் உள்கட்டமைப்பிலும் சேதம் ஏற்பட்டது.