வாஷிங்டன்
கிழக்கு கட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அதிபர் பஷார் அல் ஆசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷியா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாக தெரிவித்துள்ளது.
ஐ.நா.,வின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு பிறகும் ரஷிய போர் விமானங்கள் கிழக்கு கட்டாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தனது அரசு படைகள் முன்னேறிச் செல்வதால் தாக்குதல் தொடரும் என அதிபர் பஷார் அல்-ஆசாத் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான போர் நிறுத்தம் என மேற்கத்திய நாடுகள் கூறுவது அபத்தமான பொய் எனவும் ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், அரசுப்படைகள் கால்வாசி பகுதியை அடைந்துவிட்டதாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு கட்டாவில், இன்று உதவி பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி தங்களிடம் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசியுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
இரு தலைவர்களும் பஷர் அல் அசாத்தின் ஆட்சியில் அப்பாவி பொதுமக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் பொறுப்பற்ற ஆதரவு தெரிவிப்பது குறித்து கவலை தெரிவித்தனர்.
இரு தலைவர்களும் தொலைபேசி மூலம் நடத்திய ஆலோசனையில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு அமெரிக்க-எகிப்திய ஒத்துழைப்பை அதிகரிக்க, சிரியாவில் மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றாக ஒத்துழைப்பது மற்றும் சிரியாவில் மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றாக ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.