உலக செய்திகள்

லிபியா மசூதியில் இரட்டை குண்டு வெடிப்பு ஒருவர் பலி; 129 பேர் படுகாயம்

லிபியாவில் திரிபோலி நகரில் இருந்து 620 மைல் தொலைவில் அமைந்து உள்ள நகரம், பெங்காசி. அங்கு உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையையொட்டி வழக்கமான தொழுகை நடைபெற்றது.

பெங்காசி,

மசூதியில் அப்போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பால் அந்த மசூதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி ஆனார். 129 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அந்த மசூதியின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் இருந்த ஒரு குண்டும், காலணிகள் ஸ்டேண்டில் வைக்கப்பட்டு இருந்த ஒரு குண்டும்தான் வெடித்ததாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் 24ந் தேதி பெங்காசியில் உள்ள மற்றொரு மசூதியின் வெளியே இரட்டை கார் குண்டுகள் வெடித்து சுமார் 40 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

வெள்ளிக்கிழமை நடந்த இரட்டை குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SCROLL FOR NEXT