உலக செய்திகள்

ஐ.நா.வில் இருந்து ரஷியாவை வெளியேற்ற வரைவு தீர்மானம்; வாக்கெடுப்பில் விலகியிருந்த இந்தியா

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்வதற்கான வரைவு தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருந்தது.

தினத்தந்தி

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 43வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் துறைமுக நகரான மரியுபோலில் ரஷிய படைகள் ஊடுருவலுக்கு பிறகு 5 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

ரஷியா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயராகியுள்ளன. ஐ.நா.வில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி 7 நாடுகள் வலியுறுத்தி இருந்தன.

உக்ரைனில் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷிய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. ரஷியாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கி ஆகியவை அமெரிக்க நிதி அமைப்பை தொடர்புகொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை வெளியேற்ற வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசரகால சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான உக்ரைன் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒரு வாய்ப்பல்ல. அது ஒரு கடமை என கூறியுள்ளார்.

ஐ.நா. பொது சபையில் ரஷியா சார்பிலான பிரதிநிதி பேசும்போது, இந்த வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளுக்கான கட்டமைப்பை அழிக்கும் மேற்கத்திய நாடுகள் மற்றும் அவர்களுடைய கூட்டணி நாடுகளின் முயற்சிக்கு எதிராக வாக்களிக்கவும், உண்மையில் உங்களுடைய முடிவை பரிசீலனை செய்யவும், அவையில் கூடியுள்ள அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம் என கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பை வெளியேற்றுவதற்கான வரைவு தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இருந்து இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் விலகி இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நாடுகளில் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்கு பதிவு செய்துள்ளன.

இந்தியா வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தது பற்றி ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறும்போது, போரால் மோசமடைந்து வரும் சூழ்நிலையை பற்றி தொடர்ந்து நாங்கள் ஆழ்ந்த வருத்தங்களை கொண்டுள்ளோம். அனைத்து வகையிலான போரையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஒன்றுமறியாத மனித உயிர்கள் ஆபத்தில் உள்ளபோது, இரு நாட்டு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒன்றே சரியான தீர்வாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். புச்சா நகரில் மக்கள் படுகொலை பற்றிய சமீபத்திய அறிக்கைகள் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த படுகொலைகளை பாரபட்சமின்றி நாங்கள் கண்டிக்கிறோம். இதுபற்றி தனிப்பட்ட முறையிலான விசாரணை மேற்கொள்ள நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்