அபுதாபி,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அபுதாபி விமான நிலையம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சயீத் சர்வதேச விமான நிலையத்தில் டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அபுதாபியில் உள்ள அதிகாரிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் ஒரு ஆசிய நாட்டவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர். வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து புதுப்பிப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.