அபுதாபி
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் தப்ரா பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அணு உலையின் மீது இன்று டிரோன் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதில், அணு உலையின் மின்சார ஜெனரேட்டர் தீப்பற்றி எரிய தொடங்கியது. எனினும், இந்த தாக்குதலில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கதிரியக்கமும் பாதுகாப்பான அளவில் உள்ளன. உலையின் முக்கிய பகுதிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன என அந்நாட்டின் மத்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு கழகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இந்த தாக்குதல்களை நடத்தியது யார், இதற்கு யார் காரணம் என்பன பற்றிய தகவல்களை ஐக்கிய அரபு அமீரகம் தெரியப்படுத்தவில்லை. ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மோதலின்போது, வளைகுடா பகுதியில் அமைந்த ஐக்கிய அரபு அமீரகம் மீது பலமுறை ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன.
அப்போது, எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் கடல்சார் உட்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது என அதுதொடர்பாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
ஹார்மூஸ் ஜலசந்தியை சார்ந்திருக்காமல் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்புக்காக புதிய பைப் வழி திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் விரைவாக செய்து வரும் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்பாடுகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.