லிமா
பெரு நாட்டின் தெற்கே பசிபிக் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் ஐகா பகுதிக்குட்பட்ட பம்பா டி ததே என்ற நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில், 56.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், 27 பேர் காயமடைந்து உள்ளனர். எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
நிலநடுக்கம் பாதித்த நகரில், வீடுகள் குலுங்கின. சான் லூயிஸ் கொன்ஜகா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளன. சுவர்கள், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால், மக்கள் அலறியடித்து வீடுகள், குடியிருப்புகளை விட்டு வெளியே வந்து, தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி அமதியோ புளோரெஸ், நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளான நகருக்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். அதிகாரிகளுடன் நிவாரண பணிகள் தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டார்.