உலக செய்திகள்

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்; 754 பேர் பலி

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ

கின்ஷாசா,

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது.

எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் காங்கோ போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

754 பேர் பலி

இந்நிலையில், காங்கோவில் 2,011 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 754 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் இடுரி, வடக்கு கிவு, தெற்கு கிவு ஆகிய மாகாணங்களில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை, காங்கோவில் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பணிச்சுமை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எபோலா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.