உலக செய்திகள்

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடுமையாக இருக்கும் என்று சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை

இந்த ஆண்டில் 90 சதவீத நாடுகள், பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் எனக் கூறியுள்ள சர்வதேச பண நிதியம், இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

வாஷிங்டன்

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சர்வதேச பண நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குநரான கிறிஸ்டலினா ஜியார்ஜிவா உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

உலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்த நிலையைச் சந்தித்து வருகிறது. பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் இதற்குக் காரணம்.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போவதாக கணிக்கிறேன்.

ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ச்சி கண்ட நாடுகளில், பொருளாதார நிலை இயல்பாக இருக்கும். பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை இந்த ஆண்டில் கடுமையாக இருக்கும்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் படிப்படியாக குறையும். பொருளாதார மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தக திறனைப் பெருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.