உலக செய்திகள்

இந்தியர்களிடையே தவறான புரிதல்களை ஏற்படுத்தி பிளவை உண்டாக்க முயற்சிகள் நடக்கின்றன - பியூஷ் கோயல்

இஸ்லாமிய நாடுகள் கூட பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகள் வழங்கியுள்ளதாக பியூஷ் கோயல் கூறினார்.

டோக்கியோ,

இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது என்றும் பிளவுபட்ட நாடு ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது என்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பியூஷ் கோயல்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு முன்னனி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் உயர்நிலைத் தலைவர்களுடன் இந்திய மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது, வர்த்தக நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிளவை உண்டாக்க முயற்சி

அந்த நிகழ்சில் அவர் பேசியதாவது:-

இன்று, இந்திய மக்களிடையே.. எனது சொந்தக் குடும்ப வட்டத்திற்குள்ளும் கூட.. தவறான புரிதல்களை ஏற்படுத்திப் பிளவை உண்டாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதமர் மோடி, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு தீங்கு விளைவிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் பாகுபாடு காட்டலாம் என்பது போன்ற கருத்துகள் பரப்பப்படுகின்றன.

பெரும் செல்வாக்கு

பாகிஸ்தானை தவிர்த்துப் பார்த்தால், ஏழு அல்லது எட்டு இஸ்லாமிய நாடுகள் கூட அவருக்குத் தங்கள் உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன என்பதையும், இதன் மூலம் இஸ்லாமிய உலகில் அவர் பெரும் செல்வாக்குடன் திகழ்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் கவுரவத்தை உயர்த்த இங்குள்ள நமது தூதர்கள் எத்தகைய அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

வளர்ச்சியடைந்த நாடு

இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது... மேலும், 'விக்சித் பாரத் 2047' (வளர்ச்சியடைந்த இந்தியா 2047) பற்றிப் பேசும்போது, ​​பிளவுபட்ட ஒரு தேசம் ஒருபோதும் வளர்ச்சியடைந்த நாடாக மாற முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..."

இவ்வாறு அவர் கூறினார்.