உலக செய்திகள்

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர், கதக் மற்றும் போல்கா நடன நிகழ்ச்சிகள் நடத்தியும், இசையமைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாஷ்கன்ட்

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவரை அந்நாட்டு ஜனாதிபதி ஷாவ்கத் மிர்ஜியோயேவ் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர், கதக் மற்றும் போல்கா நடன நிகழ்ச்சிகள் நடத்தியும், உஸ்பெகிஸ்தானின் பாரம்பரிய தொய்ரா மற்றும் சாங் இசை கருவிகளை கொண்டு இசையமைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உற்சாக வரவேற்பு

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், தாஷ்கன்டில் இந்திய வம்சாவளியினர் அளித்த உற்சாக வரவேற்பு மற்றும் அன்பால் மகிழ்ந்து போனேன். இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே, நம்முடைய இந்திய வம்சாவளியினர் ஒரு வாழும் பாலம் போன்று இருப்பதுடன், இரு நாடுகளிடையேயான நட்புறவுக்கான பிணைப்பை வலுப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

கிர்கிஸ்தான் பயணம்

இந்த பயணத்தில், இரு நாடுகள் இடையேயான நட்புறவை இன்னும் வலுப்படுத்துவதற்காக, அந்நாட்டு ஜனாதிபதி மிர்ஜியோயேவுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், கனிமங்கள், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக கையெழுத்திடப்பட உள்ளது.

உஸ்பெகிஸ்தான் பயணம் நிறைவடைந்ததும், பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்கிறார். கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.