அடிஸ் அபாபா
எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி இன்று காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதிக்கு வந்தபோது, திடீரென விபத்தில் சிக்கியது.
அதிக பயணிகளுடன் சென்ற அந்த பஸ் சாலையில் இருந்து விலகி பல அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சிக்கி பயணிகள் 31 பேர் பலியாகி உள்ளனர். பலத்த காற்று வீசக்கூடிய மலைப்பிரதேசத்தில் சென்றபோது பஸ் விபத்தில் சிக்கியுள்ளது.
அவசரகால தேவைக்கான ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவை அந்த பகுதியில் கிடைக்காத சூழல் காணப்பட்டது. இதனால், விபத்தில் சிக்கிய பயணிகள் பொதுபோக்குவரத்து வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனாலேயே பஸ் பயணிகள் பலர் பலியாகி உள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் அந்நாட்டின் தெற்கே சிதமா பகுதியில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 66 பேர் பலியானார்கள்.