பிரஸ்சல்ஸ்,
மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் அந்த நாட்டின் ராணுவம், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இதை எதிர்த்து நடந்த மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. இதனிடையே, மியான்மரில் ராணுவம் ஆட்சிக்கு வந்து ஓராண்டை கடந்த போதிலும் ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை ராணுவவீரர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மியான்மர் ராணுவ அரசின் மூத்த அதிகாரிகள் 22 பேர் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், ராணுவத்துக்கு நிதியுதவி அளித்து வரும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்தின் மீதும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மியான்மரின் மொத்த வெளிநாட்டு நிதியில் சுமார் 50 சதவீதம் கியாஸ் வருவாயில் இருந்து கிடைத்து வரும் நிலையில், அரசு எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த பொருளாதார தடை, நாட்டின் வருவாயில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.