பீஜிங்,
சீனாவில் ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் ஷான்யின் கவுண்டி பகுதியில் ஷூசோ நகரில் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திடீரென இதில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தவிர வேறொரு பகுதியில் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றொரு இடத்தில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
இதனால், வெடிவிபத்து சம்பவத்தில் சிக்கி மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் தொழிற்சாலை விரிவாக்கம் விரைவாக நடந்து வருகிறது. எனினும், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன.
இதனால், ரசாயன மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதுகாப்பு தரநிலைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறுகின்றன.