வாஷிங்டன்,
உலக நாடுகளை கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கொரோனா தொற்றுகளால் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது. இதனால் பொருளாதார தேக்கநிலையும் உருவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜூலையில் கூகுள் நிறுவனம், அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லாத பணியாளர்கள் வருகிற 2021ம் ஆண்டு ஜூன் வரை வீட்டில் இருந்தபடியே பணியாற்றி கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.
இதேபோன்று டுவிட்டர் நிறுவனம், காலவரையின்றி தங்களது நிறுவனத்தின் சில பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறோம்.
இதுதவிர்த்து, வீட்டில் அலுவலகம் அமைக்க தேவையான செலவுகளுக்காக கூடுதலாக ரூ.74,950 ஆயிரம் ஊழியர்களுக்கு நாங்கள் வழங்க இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது.