பீஜிங்
சீனாவில் சண்டை போட்டு பேசாமல் இருந்த மாணவர்கள் 2 பேர், ஆசிரியரின் சமயோசித புத்தியால் மீண்டும் நண்பர்களானார்கள்.
சீனாவில் பள்ளியில் படிக்கும் 2 சிறு வயது மாணவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசாமல் தவிர்த்து வந்துள்ளனர்.
இதனை அவர்களுடைய ஆசிரியர் கவனித்து, அவர்களிடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர யோசனை செய்துள்ளார். இதன்படி அவர்கள் 2 பேரையும் மரப்பலகை மீது நிற்கும்படி செய்துள்ளார். ஒருவரை ஒருவர் பார்த்தபடி அருகருகே இருவரும் நிற்க வைக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் 2 பேரும் ஒருவரையொருவர் பார்க்காமல், எதிரெதிர் திசையை பார்த்தபடி கோபத்தில் நின்றனர். அவர்களை நெருங்கிய ஆசிரியர், இருவரும் நேருக்கு நேர் பார்க்கும்படி, அவர்களுடைய முகங்களை திருப்பினார். இதில், விசயம் என்னவென்றால், பலகையில் விழாமல் இருவரும் நிற்க வேண்டும்.
அப்படி நிற்காமல், யார் முதலில் தவறுகிறார்களோ, அவர்கள் மற்றொருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், இருவரும் நீண்டநேரம் பேசாமல் நின்றுள்ளனர். சக மாணவர்களும் சுற்றி நின்று இதனை வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்போது, ஆசிரியர் பலகையை லேசாக ஆட்ட, அதனால் பயந்து போன இருவரும் கீழே விழாமல் இருக்க ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொண்டனர். அவர்கள் இருவரிடம் இருந்த பகைமை மறைந்தது. இருவரும் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டனர். சுற்றி இருந்த மாணவர்களும் ஆரவாரம் செய்தனர். ஆசிரியரின் சமயோசித புத்தியால் மாணவர்கள் இருவரும் மீண்டும் நண்பர்களானார்கள். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.