அபுதாபி,
அபுதாபி - புஜைரா இடையே தொடங்கிய முதல் பயணிகள் ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில், அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா, புஜைரா ஆகிய 7 நகரங்கள் உள்ளன. வளர்ந்த நாடுகள் வரிசையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்தாலும் இதுவரை முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. மெட்ரோ, டிராம் போன்ற போக்குவரத்து சேவைகள் உள்ளூருக்குள் மட்டுமே இருந்தது.
இந்த நிலையில், 7 நகரங்களை இணைக்கும் வகையில், எத்தியாட் என்ற ரெயில் திட்டம் 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 1,200 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டு, தற்போது வரை சரக்கு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. முதல் பயணிகள் ரெயில் சேவை நேற்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது.
புஜைரா - அபுதாபி இடையே இயக்கப்படும் இந்த ரெயில் துபாய், ஷார்ஜா வழியாக செல்கிறது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பயணிகள் ரெயிலில், அதிநவீன இருக்கைகள், ஏ.சி., வைபை வசதி, உலகத்தரம் வாய்ந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு இடையே காரில் செல்ல அதிக நேரம் ஆன நிலையில், தற்போது ரெயிலில் சில மணி நேரங்களிலேயே சென்றுவிட முடியும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.