உலக செய்திகள்

அமெரிக்காவில் நாளிதழ் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு; 5 பேர் பலி

அமெரிக்காவில் நாளிதழ் நிறுவனம் ஒன்றிற்குள் புகுந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் அன்னபோலிஸ் என்ற நகரில் 4 அடுக்கு அலுவலக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கேபிட்டல் கெஜெட் என்ற நாளிதழ் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், அலுவலகத்திற்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபரொருவர் திடீரென அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருடம் பள்ளி கூடங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. கடந்த பிப்ரவரியில் புளோரிடாவின் பார்க்லேண்ட் பகுதியில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியாகினர். இதேபோன்று கடந்த மே மாதத்தில் டெக்சாஸ் பள்ளி கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.