உலக செய்திகள்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 4.5, 4.7, 5.3, 4.3 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகளில் 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவை ரிக்டர் அளவுகோலில் 4.5, 4.7 மற்றும் 5.3 என பதிவாகியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

மீண்டும் நிலநடுக்கம்

இந்த நிலையில், இன்று காலை இந்திய நேரப்படி 6.15 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8.36 மணியளவில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது.

5 முறை நிலநடுக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து 5 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.