உலக செய்திகள்

நேபாளத்தில் காட்டாற்று வெள்ளம்: நிலநடுக்கம் காரணமா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காத்மாண்டு,

திபெத் எல்லை நேபாளத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. திபெத் பகுதியில் இருந்து பாய்ந்து வந்த திடீர் வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள 'போடே கோஷி' (Bhote Koshi) ஆற்றில் கலந்துள்ளது. இது டிமுரே (Timure) மற்றும் சியாப்ரு பெசி (Syapru Besi) ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்பு தொடர்பான சேதங்களை மதிப்பிடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வெளியான தகவலின்படி, வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, நேபாளம் – சீனா எல்லையில் இன்று காலை 8 மணியளவில் 4.4 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அதே சமயம், பனிச்சரிவு காரணமாக ‘லெண்டே’(Lhende) ஆற்றின் நீரோட்டம் தடுக்கப்பட்டு, அதனால் வெள்ளம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை இந்த திடீர் வெள்ளத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.