உலக செய்திகள்

லண்டன், பாரீஸ் நகரங்களுக்கு திட்டமிட்டபடி விமான சேவை தொடரும்: மலேசியா ஏர்லைன்ஸ் அறிவிப்பு

எங்களுடைய பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எப்போதும் எங்களுக்கு முன்னுரிமையாக இருக்கும்.

கோலாலம்பூர்

மேற்காசியாவில் ஈரான் நாட்டுக்கு எதிரான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் வான்வழி தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டு உள்ள பதற்றம் நிறைந்த சூழலில், பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான சேவையை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்தும் அல்லது வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டும் வருகின்றன.

இந்நிலையில், லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களுக்கான தங்களுடைய அனைத்து விமான சேவைகளும் திட்டமிட்டபடி தொடரும் என மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், பாதிக்கப்பட்ட வான்வெளியை தவிர்த்து, மாற்று விமான பாதையை பயன்படுத்தி நாங்கள் சேவையை தொடர்கிறோம். எனினும் உயரிய பாதுகாப்பு தரநிலைகளை கடைபிடிக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

இதனால், பயண நேரம் சிறிதளவு கூடுதலாக இருக்கும் என்றபோதும், எங்களுடைய பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எப்போதும் எங்களுக்கு முன்னுரிமையாக இருக்கும்.

இந்த பகுதியில் கடுமையான சவால்களை பயணிகள் எதிர்கொண்டு வருகின்றனர். அதனை நாங்கள் புரிந்து வைத்தருக்கிறோம். அதனால், அவசர பயணத்திற்கான தேவை உள்ளவர்கள் அல்லது பயணிகளுக்கு எங்களின் குழு உதவிட தயாராக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.