காத்மாண்டு,
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள மீட்புப் பணிகளில், குறிப்பிட்ட வெளிநாடுகளின் தொழில்நுட்ப மற்றும் நிபுணர் குழுக்களின் உதவிகளை ஏற்பதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது முந்தைய நிலைப்பாட்டை நேபாள அரசு மாற்றிக்கொண்டுள்ளது.
திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, போத்தெ கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் நேபாளம் நிலைகுலைந்துள்ளது. இதனால், கிராமத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில், ஏராளமான பொதுமக்களும் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த மீட்புப் பணிகளைத் தங்களின் சொந்த படைகளே கவனித்து கொள்ளும் என நேபாள வெளியுறவு அமைச்சகம் முதலில் அறிவித்திருந்தது. ஆனால், வெளிநாட்டுப் பயணிகள் பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதால், சர்வதேச தூதரகங்களின் அழுத்தத்திற்கு பணிந்து நேபாள அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்திய அரசு, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு நாடுகளின் நிபுணர் குழுக்களுக்கு மட்டுமே நேபாள அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. பொதுவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பதிலாக, நேபாள அரசிடம் போதிய வசதிகள் இல்லாத குறிப்பிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு மட்டுமே இந்த நாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீர்மின் நிலைய சுரங்கப்பாதை மீட்புப் பணிகள், உயிரிழந்தவர்களைக் கண்டறியும் டிஎன்ஏ பரிசோதனைகள், தடயவியல் அடையாளம் காணுதல் ஆகிய தொழில்நுட்ப பணிகளுக்கு மட்டுமே இந்த நாடுகளுக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திடீர் இயற்கை பேரிடரால் நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600-ஐ நெருங்கியுள்ளது. நீர்மின் நிலைய சுரங்கங்களுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.