உலக செய்திகள்

பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகள்: அதிபர் மேக்ரான் தகவல்

பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகளை அனுப்ப உள்ளதாக அதிபர் மேக்ரான் தகவல் தெரிவித்துள்ளார்.

பாரீஸ்,

ஆப்பிரிக்க நாடுகளில் மத அடிப்படையிலான பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற பயங்கரவாத குழுக்களை வீழ்த்துவதற்காக 2014-ம் ஆண்டு ஆபரேஷன் பார்கனே என்ற தாக்குதல் நடவடிக்கையை பிரான்ஸ், மாலி, புர்கினா பாசோ நாடுகள் தொடங்கின.

அங்கு 4,500 பிரான்ஸ் படை வீரர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மேலும் 220 படை வீரர்களை சாஹல் பிராந்தியத்துக்கு அனுப்பி வைக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், எங்களுக்கு வேறு வழியில்லை. பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்ற முடிவு எங்களுக்கு தேவைப்படுகிறது. சாஹல் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் பங்களிப்பு தொடரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

நைஜர், மாலி, புர்கினா பாசோ, மவுரிடானியா, சாத் நாடுகளின் தலைவர்களை தென்மேற்கு பிரான்ஸ் நகரமான பாவ்வில் சந்தித்து பேசிய பின்னர் இந்த அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT