வெலிங்டன்: இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ப ஒப்புதல் அளித்தது. 93 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 29 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்துக்கு சுங்க வரி முழுமையாக நீக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், இதில் இடம்பெறும் பாதிக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு உடனடியாக சுங்க வரி இல்லாத நிலை ஏற்படும். அதேபோல், இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சுங்க வரி இல்லாத சந்தை அணுகலை நியூசிலாந்து வழங்குகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் நியூசிலாந்து டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது.இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் தங்களது உள்நாட்டு ஒப்புதல் நடைமுறைகளை நிறைவு செய்த பிறகு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும். 2026 ஜூன் வரையிலான ஓராண்டில், இந்தியா–நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் 3.99 பில்லியன் நியூசிலாந்து டாலராக இருந்தது. நியூசிலாந்தின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான 9-வது பெரிய ஏற்றுமதி சந்தையாக இந்தியா உள்ளது.