அனைவருக்கும் தடுப்பூசி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கட்கிழமை டி.வி.யில் தோன்றி பேசினார். அப்போது அவர் 18-44 வயதினருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார். ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி திட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் அனைவருக்குமே இலவச தடுப்பூசி என்ற மோடியின் அறிவிப்பு, பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
சர்வதேச நிதியம் வரவேற்பு
தற்போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் திட்டம், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதையொட்டி அந்த அமைப்பின் தகவல் தொடர்பு துறையை சேர்ந்த ஜெர்ரி ரைஸ், ஆன்லைனில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
அனைவரும் கொரோனா தடுப்பூசியை அணுகுவதற்கான இந்திய அரசின் அறிவிப்பையும், பெருந்தொற்று நோய்களின் சமூக செலவைக் குறைப்பதற்கும், மனித செலவினங்களை ஈடுகட்டுவதற்கும் கூடுதல் ஆதரவை வழங்குவதையும் சர்வதேச நிதியம் வரவேற்கிறது. இரண்டாவது அலை மற்றும் அதனோடு தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படலாம் என தெரிவிக்கின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து அடுத்த மாதம் உலக பொருளாதார கண்ணோட்டத்துக்கான புதுப்பிப்பின்போது எங்கள் கணிப்பை மாற்றி அமைப்போம்.
இந்தியா முக்கியம்
உலக பொருளாதாரத்துக்கு இந்தியா முக்கியமானது. உலக அளவிலும், பிராந்திய அளவிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதன் பெரிய பங்கு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதார கண்ணோட்டங்கள் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன. இது வலுவான வர்த்தக இணைப்புகள் மற்றும் உலகளாவிய வினியோகச் சங்கிலிகளைக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிவிகிதம் 12.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கடந்த ஏப்ரலில் கணித்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி 9.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ளது.