உலக செய்திகள்

பிரான்சில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு

பிரான்சில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் அங்கு 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்த அதிகாரிகள் அளவிலான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், பிரான்சின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்த தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்த தடுப்பூசி குறித்து ஐரோப்பிய மருந்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவுகள் வந்த பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்படும் எனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.